செவ்வாய், ஜூலை 31, 2012

விலை


22/06/2012         -              குர்கான்:   நிலத்தை அனுமதியின்றி உறிஞ்சுவதற்காக போடப்பட்ட ஆழ்துளை கிணறில் விழுந்த சிறுமி மாஹி பலி.



25/06/2012   -   சென்னை: வேகமாக பைக்கில் சென்றபோது தவறி விழுந்து தலையில் காயம்பட்டு அமைச்சர் சூலூர் கே ராஜா மகன் உயிரிழப்பு.

25/07/2012   -   தாம்பரம்: ‘Fitness Certificate for Road’ கொடுக்கபட்டு பதினைந்து நாளே ஆன நிலையில் பள்ளி பேரூந்தின் இருக்கை அடியில் இருந்த பெரிய ஓட்டையில் விழுந்து பின் சக்கரத்தில் நசுங்கி ஆறு வயதே ஆன சிறுமி ஸ்ருதி பலி.


25/07/2012   -     வேப்பேரி: பள்ளியில் உள்ள மாடிப்படியில் ஏறும்போது அதன் கைப்பிடி வழியாக விழுந்த சிறுவன் விஜய் உயிருக்கு போராடி ஒரு வாரத்தில் இறந்தான்.

30/07/12           -              ஆவடி:    பள்ளிக்கு செல்லும் அண்ணனை வழியனுப்ப வேனுக்கு அருகில் வந்த ஒன்றரை வயது குழந்தை, பின் சக்கரத்தில் நசுங்கி சாவு.


அன்று இரவு மாஹிக்கு பிடிக்கும் என்று அவள் தாயார் ஏதோ ஒரு இனிப்பு செய்ய நினைத்திருக்கலாம். ஸ்ருதியை ஏதோ ஒரு பூங்காவிற்கு அழைத்து செல்ல அவள் தந்தை விரும்பியிருக்கலாம். ஏன்? அந்த ஒன்றரை வயது குழந்தை சாப்பிட்டு கொண்டிருந்த தட்டின் ஈரம் கூட காயாமலிருந்திருக்கலாம்.

மேற்சொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்த மறுதினமே அரசு விழித்தெழுந்து சில முன்னெச்சேரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. மாஹி இறந்த மறு நாளே நாடு முழுவதும் அனுமதியின்றி போடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்க்கு உத்தரவு போடப்பட்டது.

அமைச்சர் மகன் இறந்த மறுநாள், சென்னை மற்றும் தமிழ்நாட்டின் மற்றைய பெருநகரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மட் அணிந்து செல்ல பணிக்கபட்டு, பணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு பின்பற்றபடுகிறது.

ஸ்ருதியின் இறப்பு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளின் வாகனங்களிலும் தகுதி சான்றிதழ் உள்ளனவா என்று விடிய விடிய சோதனை நடத்த முனைந்திருக்கிறது.

சம்பவத்திற்க்கு ஒரு நாள் முன்பு இந்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கபட்டிருந்தால் கூட மாஹி, ஸ்ருதி, விஜய் என அனைவரும் பிழைத்திருக்க வாய்ப்புண்டு.

லட்சம் உயிர்களை செர்நோபைலில் இழந்தபின் தான் உலகமே அணு உலைக்கு எதிராக விழித்தது. இரண்டு நகரமே அழிந்தபின் தான் அணு ஆயுதங்களுக்கு எதிராக குரல் கொடுக்கிறது. ஒவ்வொன்றிலும் ஒன்றை கற்றுக்கொண்டு தட்டுதடுமாறி தன் தவறுகளை மறைக்க முயன்றிருக்கிறான் மனிதன்.

சூனியத்தில் ஆரம்பிக்கும் மனிதனின் வாழ்க்கை மீண்டும் சூனியத்தில் சென்று முடிவதற்குள், தான் தனக்காக ஏற்படுத்தி வைத்திருக்கும் கோட்பாடுகள் மற்றும் சுக போகங்களுக்கான வசதியில் தானே விட்டில் பூச்சியாய் வீழ்ந்து மடிவது வேதனை தரும் உண்மை.

அடிக்கடி  காதில் விழுவது, சுய புத்தி வேண்டும், இல்லையென்றால் சொல் புத்தியாவது வேண்டும், அதுவும் இல்லையென்றால் பட்டுதான் திருந்தவேண்டும்'.

அப்படி பட்டுதான் திருந்தவேண்டும் என்றால், நாம் இன்னும் கொடுக்க வேண்டிய விலைகள்  எத்தனை?

கருத்துகள் இல்லை: